சிங்கப்பூரில் டெங்கி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த வாரம் 228 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டில் பதிவான ஆகக் குறைவான வாராந்தர எண்ணிக்கை இது. தொடர்ந்து நான்காவது வாரமாக டெங்கி பாதிப்பு எண்ணிக்கை 300க்கு குறைவாக உள்ளது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஜூலை மாதத்தில் ஆக அதிகமாக ஒரே வாரத்தில் 1,792 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு டெங்கி நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.
டெங்கி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் சமூகத்தின் முயற்சிகள் காரணமாக, ஆகஸ்ட் மாதத்திலிருந்து படிப்படியாக பாதிப்படைவோர் எண்ணிக்கை குறைந்தது என்று சுற்றுப்புற வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரியும் பொது சுகாதார தலைமை இயக்குநருமான திரு செவ் மிங் ஃபாய் கூறினார்.
நேற்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் 57 டெங்கிப் பரவல் இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் இருந்து 3,060 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் சுமார் 98 விழுக்காட்டு இடங்களில் டெங்கிப்பரவல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி 230 குடியிருப்புப் பகுதிகள் ஏடிஸ் கொசுக்கள் அதிகமுள்ள இடங்களாக உள்ளன. தெம்பனிஸ் ஸ்திரீட் 11, கேலாங் ரோடு, புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 21, அட்மிரல்ட்டி டிரைவ் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான டெங்கிப் பரவல் உள்ளது. அவற்றில் தீவிரமான ஏடிஸ் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டுபிடிக்க நாடெங்கும் கிட்டத்தட்ட 954,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கொசு உற்பத்தியான இடங்களின் உரிமையாளர்கள் மீது 7,060 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று வாரியம் குறிப்பிட்டது.
ஜூலை 15ஆம் தேதி முதல் மீண்டும் மீண்டும் கொசு வளர்ப்பு குற்றங்களைச் செய்யும் வீடுகளுக்கு கடுமையான தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அப்போதிருந்து, வாரியத்தின் சோதனைகளில் ஏறக்குறைய 260 குடியிருப்புப் பகுதிகள் இடம்பெற்றன.
ஒரு முறைக்கு மேல் குற்றம் புரிந்ததாக 18 குத்தகையாளர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

