ஏழு வயது சிறுமியைக் கடத்தியதற்காக கடந்த 2004ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை, 3 பிரம்படிகள் விதிக்கப்பட்ட ஆடவர், இவ்வாண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதி சாங்கி சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக்கொண்டார்.
'பைபோலார்' எனப்படும் இருமுனை மனநலப் பிரச்சினையால் முன்பு பாதிக்கப்பட்டிருந்த 58 வயதான சுவா செர் லியன், சிறைச்சாலையின் உளநோய்ப் பிரிவில் இருந்தார்.
மற்ற கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, சுவா வழக்கம்போல அங்கு செல்லவில்லை.
மூன்றாவது மாடியிலிருந்து நான்காவது மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் ஏறி, உட்புற வேலியின் மீதேறி பின்னர் தம் பிடியை விட்டதில் அவரது கழுத்து, பின்மண்டை பகுதிகள் மூன்றாவது மாடியின் கீழ்த் தளத்தில் பட்டு அடிபட்டன.
சாங்கி பொது மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்ட அவர், தலையில் ஏற்பட்ட காயத்தால் காலை 10.15 மணிக்கு உயிரிழந்தார்.
சிறைக்குள் இருந்தபோதும் சுவாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதும் சிறைச்சாலை அதிகாரிகள் கவனக்குறைவாக இல்லை என்பதும் மரண விசாரணையில் தெரியவந்ததாக இன்று (டிசம்பர் 22) தெரிவிக்கப்பட்டது.
உயிரை மாய்த்துக்கொள்ளும் போக்கை அவர் காட்டவில்லை என்றும் அவரது மரணத்தில் வேறு யாருக்கும் சந்தேகிக்கும் வகையிலான தொடர்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு, சிறை அறைக்குள் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கைதிகள் தனிமையில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2003ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை 4.30 மணியளவில் இயோ சூ காங் ரோட்டில் இருக்கும் வீட்டிலிருந்து சிறுமியை சுவாவும் 35 வயதான டான் பிங் கூன் என்பவரும் கடத்திச் சென்று சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு தெம்பனிஸ் ஸ்திரீட் 72ல் விட்டுச் சென்றனர்.
அந்தக் குற்றத்துக்காக இருவருக்கும் ஆயுள் தண்டனையும் 3 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
உதவி தேவைப்படுவோர் அழைக்க:
சிங்கப்பூர் அபய ஆலோசனை சங்கம் (Samaritans of Singapore): 1800-221-4444 மனநலத்திற்கான சிங்கப்பூர் சங்கம் (Singapore Association for Mental Health): 1800-283-7019 மனநல கழகம்: 6389-2222 டிங்கல் ஃபிரண்ட் (Tinkle Friend):1800-274-4788


