இரண்டு மாடி கடைவீடு ஒன்றின் கூரை வழியாக வெளியேற முயற்சி செய்த 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள அந்தக் கடை வீட்டில் கடந்த 29ஆம் தேதி இருந்த 15 சிங்கப்பூரர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் இருந்த 29 வயது ஆடவர் கண்மூடித்தனமான செய்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.
அங்கிருந்த 15 பேரில் 12 பேர் ஆடவர்; மூவர் பெண்கள். அவர்கள் அனைவரும் 22 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்.
இன்று (டிசம்பர் 23) வெளியான போலிஸ் அறிக்கையில், இம்மாதம் 19ஆம் தேதி அவர்கள் மது அருந்துவதற்காக ஒன்று கூடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
புகார் ஒன்றின் அடிப்படையில், அந்தக் கடைக்கு போலிசார் சென்றபோது 29 வயது ஆடவர் கூரை வழியாக வெளியேற முயற்சி செய்தார். பின்னர் அவர் கைதானார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அங்கிருந்த மேலும் 14 பேரில் பத்து பேர் மொட்டை மாடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொவிட்-19 பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை அவர்கள் மீறியதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், கூரை மீது ஏறி தப்ப முயன்ற ஆடவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை, $2,500 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை, $10,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.