தென்கொரியாவிலிருந்து இம்மாதம் 27ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தல் வளாகங்களில் 14 நாட்களுக்குத் தங்கியிருக்க வேண்டும்.
சனிக்கிழமை (டிசம்பர் 26) இரவு 11.59 மணியிலிருந்து இது நடப்புக்கு வருவதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது. தென்கொரியாவில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்திருப்பதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிங்கப்பூர் - தென்கொரியா இடையிலான போக்குவரத்து பச்சைத் தடம் வாயிலாக சிங்கப்பூருக்குத் திரும்புபவர்களுக்கும் இது பொருந்தும். சமூகப் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மாதம் 2ஆம் தேதி முதல், தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் தங்களது வீடுகளிலேயே 14 நாட்கள் தங்கியிருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஹாங்காங், ஃபிஜி, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோர், நிபந்தனைகளுக்குட்பட்டு, தங்களது வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி கோரலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.