மூன்றாம் கட்டத் தளர்வுகள்: சமயத் தலங்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள்

2 mins read
91ee70b2-a19b-41b0-966b-c7dfe36a90fe
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூன்றாம் கட்டத் தளர்வுகள் நாளை (டிசம்பர் 28) முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், சமயத் தலங்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளைக் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, சமயத் தலங்களில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் சேவைகளிலும் அதிகபட்சம் 250 பேர் பங்கேற்க முடியும்.

டிரேஸ்டுகெதர் கருவிகளைச் சேகரிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டபின், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டிரேஸ்டுகெதர் கருவி அல்லது செயலி மூலமாக மட்டும் 'சேஃப்என்ட்ரி' முறை கட்டாயமாக்கப்படும். அதனால், டிரேஸ்டுகெதர் கருவி அல்லது செயலி மூலம் வருகையாளர்களை வரவேற்க சமயத் தலங்கள் ஆயத்தமாக வேண்டும் என்று அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

வழிபாட்டு நிகழ்ச்சிகளின்போது, பக்தர்கள் அதிகபட்சம் 50 பேர் கொண்ட தொகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். அத்தொகுதிகள் குறைந்தது 1.8 மீட்டர் உயரம் கொண்ட சுவர்களால் அல்லது மூன்று மீட்டர் இடைவெளிவிட்டு, கயிறு போன்றவற்றால் பிரிக்கப்பட்டு, எல்லை வரையறுக்கப்பட வேண்டும்.

வெவ்வேறு தொகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தங்களுக்குள் கலந்துவிடாமல் தடுப்பதற்காக, அவர்கள் வெவ்வேறு நேரங்களில் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

வழிபாட்டுச் சேவைகள் முடிந்த அளவிற்கு குறுகிய காலத்தில் முடிக்கப்பட வேண்டும் என்றும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தவிர மற்ற அனைவரும் எல்லா நேரங்களில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.

பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் இடம்பெறும் வேளையில், அதே சமய வளாகத்தில் சமயச் சடங்குகள், வகுப்புகள் முதலிய மற்ற சமய நடவடிக்கைகளில் 150 பேர் வரை பங்கேற்கலாம். ஆயினும், பங்கேற்பாளர்கள் 50 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்படுவதுடன், பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நேரடி நிகழ்ச்சிகளின்போது, வழிபாட்டுச் சேவைகளை மேற்கொள்வோரில் ஒரு நேரத்தில் அதிகபட்சம் பத்துப் பேர் முகக்கவசத்தை அகற்ற அனுமதிக்கப்படுவர். அவர்களுள் அதிகபட்சம் ஐவர் பாடுவதற்காகத் தங்கள் முகக்கவசங்களைக் கழற்றலாம்.

அந்தக் குறிப்பிட்ட வேளையில் மட்டுமே அவர்கள் முகக்கவசங்களை நீக்கிக்கொள்ளலாம் என்றும் நேரடி நிகழ்ச்சியில் பங்குபெறுவோருக்கும் பக்தர்களுக்கும் இடையே குறைந்தபட்சம் மூன்று மீட்டர் இடைவெளி பேணப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழிபாட்டுச் சேவையின்போது மற்றவர்கள் பாட அனுமதியில்லை.

புனித நூல்கள், காணிக்கைக் கூடைகள், தொழுகைப் பாய்கள் போன்ற பொதுவான பொருள்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

சமயச் சேவைகளையும் வழிபாடுகளையும் பதிவுசெய்து, ஒளிபரப்புதல் போன்ற தொலைவழி நடவடிக்கைகளைத் தொடர சமய நிறுவனங்களை அமைச்சு ஊக்குவிக்கிறது.

மூன்றாம் கட்டத் தளர்வுகளின்போது நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு, ஊழியர்களைப் பணியமர்த்துதல் உட்பட தங்களது பாதுகாப்பு நிர்வாகத் திட்டங்களைக் குறைந்தது மூன்று நாள்களுக்குமுன் அந்நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும். மேல்விவரங்களுக்கு அவை https://www.cpro.gov.sg எனும் இணையத்தளத்தை நாடலாம்.

அவ்வாறு அவை தங்களது திட்டங்களைச் சமர்ப்பிக்காவிடில், இரண்டாம் கட்டத் தளர்வுகளின்போது அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்