சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 29) நண்பகல் நிலவரப்படி புதிதாக 13 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்கள் சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு வீட்டில் தங்கியிருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இதற்கிடையே, சமூக அளவிலோ அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாருக்கும் தொற்று இல்லை என்றும் அமைச்சு கூறியது.
இன்று பதிவான சம்பவங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 58,542.
சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவரில் நால்வர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் இந்தியா, மியன்மார், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள். மூவர் சிங்கப்பூரர்கள்; ஒருவர் சார்ந்திருப்போர் வருகை அனுமதியுடையவர்.
ஒருவர் 48 வயதான சிங்கப்பூரர். அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லை . ஆனால், வெளிநாடுகளிலிருந்து வந்த விமானங்களின் சிப்பந்திகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இம்மாதம் 12 முதல் 16ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவுக்குச் சென்று திரும்பிய விமானத்தில் அவர் பணிபுரிந்தார்.
கடந்த புதன்கிழமை முதல் 2 முறை அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பகுதி நேரமாக அவர் கிராப் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தார் என்றும் கூறப்பட்டது.
அனைத்துலக அளவில் 81.1 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.77 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.