சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 30) நண்பகல் நிலவரப்படி புதிதாக 27 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.
அதில் 25 பேர் சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு வீட்டில் தங்கியிருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்தது.
எஞ்சிய ஒருவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி. சிங்கப்பூருக்குத் திரும்பிய பிறகு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்தது. பின்னர் அவருக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன.
வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு, இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் எழுவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; அறுவர் இல்லப் பணிப்பெண்கள்.
இன்று உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதிகளில் யாருக்கும் புதிதாக தொற்று பதிவாகவில்லை.
கடந்த திங்கட்கிழமை உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிப்பந்தி, பகுதி நேர கிராப் ஓட்டுநராக இருப்பதிலிருந்து தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், இருவர் நிரந்தரவாசிகள், 9 பேர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், ஒருவர் குறுகியகால வருகை அனுமதி உடையவர்.
அவர்கள் அனைவரும் இந்தியா, அமெரிக்கா, பங்ளாதேஷ், இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். இங்கு வந்த பிறகு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
அனைத்துலக அளவில் 81.9 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.79 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.