தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் சிகரெட் பயன்பாட்டுக்கு சட்டபூர்வ வயது 21; ஜனவரி 1 முதல் நடைமுறை

2 mins read
f91e1517-9468-4649-8989-100bdfd6bf65
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புகையிலைப் பொருட்களை வாங்குவது, பயன்படுத்துவது, வைத்திருப்பது, விற்பனை செய்வது, விநியோகம் செய்வது ஆகியவற்றுக்கான சட்டபூர்வ வயது வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 1, 2021) முதல் 21 ஆக உயர்கிறது.

நாடாளுமன்றத்தில் 2017 நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட புகையிலை (விளம்பரம் மற்றும் விற்பனை கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் இடம்பெறும் ஆகக் கடைசியான மூன்றாவது மாற்றமாக இது இருக்கிறது.

இந்தச் சட்டபூர்வ வயது 2019 ஜனவரி 1ஆம் தேதி 18லிருந்து 19 ஆகியது. பிறகு 2020 ஜனவரி 1ஆம் தேதி அந்த வயது 20 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த மாற்றம் பற்றி சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது. சிகரெட் புகைப்பதைக் குறைப்பதற்கு சிங்கப்பூர் இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக குறைந்தபட்ச சட்டபூர்வ வயது 21 ஆக உயர்கிறது.

சிகரெட் புழக்கதைக் குறைத்து உடல்நலனையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் சுகாதார மேம்பாட்டு கழகம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து இதர பல முயற்சிகளையும் இந்த அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

பொது போதனைத் திட்டம், வரி விதிப்பு, புகைப்பதை நிறுத்துவதற்கான செயல்திட்டம், புகையிலைப் பொருள் விளம்பரத் தடை முதலான பலவும் இவற்றில் அடங்கும்.

சிங்கப்பூரில் உடல்நலக் கேடுகளுக்கும் அகால மரணங்களுக்கும் புகையிலைப் பயனீடு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. புற்றுநோய், இதய நோய், வாதம், நுரையீரல் நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கும் அது காரணம் என்று அறிவியல் பூர்வமாகத் தெரியவந்துள்ளது.

புதிய சட்டபூர்வ வயது பற்றி இந்தத் தொழில்துறையாளர்களுக்கு நினைவூட்டப்பட்டு இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விதி பற்றிய எச்சரிக்கைக் கடிதங்கள் சில்லறை வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் அவற்றைக் கடைகளில் எடுப்பாகத் தெரியும்படி ஒட்டி வைக்க வேண்டும்.

சட்டத்தை மீறுவோருக்கு கடும் தண்டனை கிடைக்கும். சட்டப்படி, 21 வயதுக்குட்பட்டவர்கள் சிகரெட் பொருட்களை வாங்கினால், வைத்திருந்தால் $300 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சட்டத்தை மீறும் சில்லறை வர்த்தகர்களுக்கு, அவர்கள் முதல் தடவையாக குற்றம் செய்திருந்தால் $5,000 வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் அபராதம் $10,000 ஆகக் கூடும். சில்லறை வர்த்தக உரிமம் பறிபோகக்கூடிய ஆபத்தும் உண்டு.

சட்டப்படி 21 வயதை எட்டாத, பள்ளிச் சீருடையுடன் வருவோருக்கு அல்லது 12 வயதுக்கும் குறைந்த சிறார்களுக்கு எந்தக் கடையாவது சிகரெட் பொருட்களை விற்றிருப்பது தெரியவந்தால், அந்தக் கடை முதல் தடவையாக குற்றம் செய்திருந்தாலும் உரிமம் பறிபோய்விடும்.

குறிப்புச் சொற்கள்