உலோக மூடி ஒன்றின் மீது கால் வைத்ததும் அந்த மூடி திறந்துகொண்டதால், சுமார் 1.5 மீட்டர் ஆழத்தில் குழிக்குள் விழுந்தார் 57 வயது ஆடவர் ஒருவர்.
ஈசூன் அவென்யூ 5ல் உள்ள புளோக் 732க்கு அருகில் உள்ள காப்பிக்கடை ஒன்றின் வெளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 27) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் திரு கோலின் பெரேராவின் வலது முழங்காலில் வெட்டுக் காயங்களும் முதுகில் பிடிப்பும் ஏற்பட்டது.
காப்பிக் கடைகளின் கழிவு நீரில் இருக்கும் எண்ணெய்யைப் பிரித்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழி அது.
அந்த வழியாகச் சென்றவர்கள் உதவிக்கு வந்து அவரை வெளியே தூக்கியதுடன், அவசர சிகிச்சை வாகனத்தையும் அழைத்தனர்.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனைக்குச் செல்ல விருப்பமில்லை என்று குறிப்பிட்ட திரு பெரேரா, பின்னர் வலி அதிகரித்ததன் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றார்.
சிகிச்சைக்குப் பிறகு ஒரு வார மருத்துவ விடுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. சிகிச்சைக்காக திரு பெரேரா $600 செலவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் அந்தப் பகுதியைத் தனிமைப்படுத்தி செம்மைப்படுத்த குழு ஒன்று அனுப்பப்பட்டதாக நீ சூன் நகர மன்றப் பேச்சாளர் பாலின் குவா குறிப்பிட்டார்.
அந்தக் குழியைப் பராமரிக்கும் பணிகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய குழிகளை அவ்வப்போது பரிசோதித்து சரிப்படுத்துமாறு காப்பிக் கடைகளுக்கு நினைவூட்டப் போவதாக திருவாட்டி பாலின் குவா குறிப்பிட்டார்.
பகுதிநேர விநியோகிப்பாளரான திரு பெரேரா, தாம் கையில் சுமந்து சென்ற 2 பறவைக் கூடுகள் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக சாவ் பாவ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.