தன் தந்தையைக் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கும் 14 வயது சிறுவனை இந்த வழக்கில் மூன்று வழக்கறிஞர்கள் தற்காத்து வாதாடுவர்.
விதர்ஸ் கத்தார் வோங் என்ற சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த திரு சசி நாதன், திரு ஜெரோமி பெரேரா, திருவாட்டி ஜெ. ஜெயலட்சுமி ஆகிய அந்த மூன்று வழக்கறிஞர்களையும் இந்த வழக்கில் தற்காப்பு தரப்பாக அந்தச் சிறுவனின் குடும்பம் நியமித்து இருக்கிறது.
இளையர் நீதிமன்றத்தில் இன்று அந்த 14 வயது சிறுவனின் வழக்கு விசாரணைக்கு வந்தது.
தன் கட்சிக்காரரான அந்தச் சிறுவனின் வழக்கு ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்றும் அதுவரை அந்தச் சிறுவன் சிறார் விடுதியில் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார் என்றும் வழக்கறிஞர் திரு நாதன் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பதின்ம வயது சிறுவன், அவரின் குடும்பத்தார் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது.
லோயாங் அவென்யூ அருகே ஃபுளோரா ரோட்டில் உள்ள ‘இடெல்வெய்ஸ் பார்க்’ கூட்டுரிமை புளோக்கில் இருக்கும் ஒரு வீட்டில், டிசம்பர் 11 ஆம் தேதி முற்பகல் சுமார் 10 மணிக்கு அந்த பதின்ம வயதுச் சிறுவன் தன்னுடைய 49 வயது தந்தையைக் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.
போலிஸ் இதற்கு முன்பாக ஓர் அறிக்கை வெளியிட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்துக்குத் தாங்கள் சென்றபோது அங்கு அந்த ஆடவர் காயம் அடைந்த நிலையில் அசைவின்றி தரையில் கிடந்ததை அதிகாரிகள் பார்த்ததாக போலிஸ் தெரிவித்தது.
அந்த ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பிறகு அவர் இறந்துவிட்டார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டார்.
கொலை குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுவோருக்குச் சட்டப்படி மரண தண்டனை விதிக்க முடியும்.
இருந்தாலும் இத்தகைய தீர்ப்புக்கு ஆளான 18 வயதுக்கும் குறைந்தவர்களைப் பொறுத்தவரை மரண தண்டனை விதிக்கப்படாது. அதற்குப் பதிலாக ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம்.