ஹவ்காங் ஸ்திரீட் 22ல் உள்ள வீவக புளோக் ஒன்றின் 3வது மாடி விளிம்பில், தொங்கிக்கொண்டு இறங்க முடியாமல் தவித்த 6 வயதுச் சிறுவனைக் காப்பாற்றினர் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள்.
நிலவனப்பு பராமரிப்பாளர்களான தாஸ் டிப்டோ, பிஸ்வாஸ் ஜிபோம் ஆகிய இருவருக்கும் அந்த நற்செயலுக்காக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் சமூக உயிர்காப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. கலோனல் லிம் ஹான் சீ எனும் மூன்றாவது எஸ்சிடிஎஃப் பிரிவு கமாண்டர் இந்த விருதை நேற்று (ஜனவரி 6) அவர்களுக்கு வழங்கினார்.
விரைந்து செயல்பட்ட சமயோசிதச் செயலை எஸ்சிடிஎஃப் தமது ஃபேஸ்புக் பதிவில் பாராட்டியது.
சிறுவன் மூன்றாவது மாடியில் சிக்கியிருந்தபோது, அருகில் மரக் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தார் தாஸ். சிறுவன் தொங்கிக்கொண்டிருந்த வீட்டின் கதவு பூட்டி இருப்பதால், அந்த வழியாகச் சென்று சிறுவனை மீட்க இயலாததைக் கூறி சிறுவனின் தாயார் அழுததைக் கண்டு, தம் வேலையில் பயன்படுத்தப்படும் ‘பூம் லிஃப்ட்’ இயந்திரத்தைப் பயன்படுத்தி சிறுவனை பத்திரமாக மீட்டனர் இருவரும்.
வெளிநாட்டு ஊழியர் நிலையமும் இவ்விருவருக்கும் விருது வழங்கி சிறப்பிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.