சிராங்கூன் சாலையில் உள்ள குவோங் வாய் ஷியு மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து அங்குள்ள அந்திமகாலப் பராமரிப்பு நிலையம் பிப்ரவரி 1ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
அந்த அந்திமகாலப் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருந்த நோயாளிகள் வீட்டில் பராமரிக்கப்படுவார்கள் என்றும் தேவை உடையோருக்கு உணவு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது என்று எச்.சி.ஏ ஹாஸ்பிஸ் கேர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
குவோங் வாய் ஷியு மருத்துவமனையின் ஏ புளோக்கில் உள்ள அந்திமகாலப் பராமரிப்பு அலுவலகம், துப்புரவு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக குறைந்தது இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அது கூறியது.
அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் வரை செயல்பாட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து பணிபுரிவர். மருத்துவ ஊழியர்கள், எ.சி.ஏ தலைமையகத்தில் உள்ள வேறோர் அலுவலகத்திற்கு மாற்றப்படுவர்.
“தீச்சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட்டு செயல்பாடுகளை விரைவில் மீண்டும் தொடங்க நாங்கள் பணியாற்றி வரும் வேளையில், நோய் முற்றியவர்களுக்கு அவர்களது வீடுகளில் சேவை வழங்கும் எங்களது கடப்பாடு தொடர்ந்து வலுவாக உள்ளது,” என்று எச்.சி.ஏ ஹாஸ்பிஸ் கேர் தலைமை நிர்வாகி ஏஞ்சலின் வீ கூறினார்.
பாதிக்கப்பட்ட அந்திமகாலப் பராமரிப்பு அலுவலகம், ஏ புளோக்கின் மூன்றாம் தளத்தில் உள்ளது. இந்தத் தீச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு 8.25 மணிக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீச்சம்பவத்திற்கான காரணம் குறித்து அது விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேபோல முன்னெச்சரிக்கையாக எவரும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்ட குவோங் வாய் ஷியு மருத்துவமனை, தீச்சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் அலுவலகத்தில் எவரும் இல்லை என்று கூறியது.
மருத்துவமனையின் தாதிமை இல்லக் குடியிருப்பாளர்கள் வேறு ஒரு புளோக்கில் தங்கி உள்ளனர். அவர்களும் தீச்சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை என சோதித்து அறிந்துகொண்டதாக மருத்துவமனை கூறியது.
ஏ புளோக்கில் உள்ள மற்ற சேவைகள் நேற்று வழக்கம்போல தொடர்ந்தன.