சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 9) புதிதாக 29 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,865 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
உள்ளூர் சமூகத்திலோ அல்லது தங்கும் விடுதிகளிலோ புதிய கிருமித்தொற்றுத்திவாகவில்லை.
நேற்று உள்ளூர் சமூகத்தில் இருவருக்கு தொற்று அறிவிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரவுன் பிளாசாவின் அஸுர் உணவகத்தில் பணிபுரியும் சிங்கப்பூரர்.
அஸுர் உணவகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாவது நபர் இந்த ஆடவர்.
வேகமாகப் பரவுவதாகக் கூறப்படும் பி117 வகை கிருமித்தொற்று இருப்பதாக அவரது முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
விமான சிப்பந்திகளுக்கும் ஹோட்டல் விருந்தினர்களுக்கும் உணவைப் பொட்டலமிடும் பணியில் ஈடுபட்டு வந்த அவர், உணவகத்தில் உணவருந்துவோருடன் தொடர்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் முதல் தேதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான அட்டவணைப்படுத்தப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என முடிவுகள் தெரிவித்தன.
கடந்த புதன்கிழமை கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட அஸுர் உணவக ஊழியரான கொரிய நாட்டவருடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், தனிமைப்படுத்தும் வளாகம் ஒன்றில் இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்துக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த உணவக ஊழியர்கள் 233 பேருக்கு கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்தது. அதில் 129 பேருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. 104 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு நபர் பிஎஸ்ஏ மரின் நிறுவனத்தில் 'ஹார்பர் பைலட்'டாக பணிபுரியும் 34 வயது ஆடவர். டிசம்பர் 30 அன்று கொவிட்-19 உறுதி செய்யப்பட்ட 'ஹார்பர் பைலட்' உடன் தொடர்புடைய ஐந்தாவது கிருமித்தொற்று சம்பவம் இது.
ஜனவரி 1 முதல் இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட கிருமித்தொற்று பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானதையடுத்து, அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தெம்பனிஸ் மால், தெம்பனிஸ் 1ல் இருக்கும் கோச்சி-சோ ஷுகோடோ உணவகம் ஆகியவற்றுகு கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்றதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

