சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. வயதானவர்களுக்கும் இங்கு வசிக்கும் மற்றவர்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் தொடர்பிலான சில விளக்கங்கள் கேள்வி - பதில் வடிவில்.
கே: இலவசமா?
ப: சிங்கப்பூரர்களுக்கும் தற்போது இங்கு தங்கியிருக்ககூடிய நீண்டகாலம் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும்.
‘எம்ப்ளாய்மென்ட் பாஸ்’, ‘எஸ் பாஸ்’, வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்கள், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், சார்ந்திருப்போர் அட்டையில் இங்கு வசிப்போர், நீண்டகால வருகை அனுமதி உடையவர்கள், மாணவர் அனுமதி அட்டை உடையவர்கள் ஆகியோர் இந்தப் பிரிவில் அடங்குவர்.
கே: தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால் என்ன நடக்கும்? நான் வேலை இழப்பேனா? குறிப்பாக, சுகாதாரப் பரமரிப்புப் பணியாளராக இருந்தால்?
ப: சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் இல்லை என்றாலும் அனைத்து உள்ளூர்வாசிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பணியை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் லியோ யீ சின் குறிப்பிட்டுள்ளார். தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவமனைகள் தொடரும்.
கே: தற்போது என்னென்ன தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு உள்ளன?
ப: சிங்கப்பூரில் தற்போது ஒரே தடுப்பூசிதான் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர், அதன் பங்காளியான ஜெர்மன் நாட்டு பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பிலான தடுப்பூசி அது.
இருப்பினும் அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான மோடர்னா, சீனாவின் சினோவேக் ஆகிய தடுப்பு மருந்துகளை வாங்கவும் சிங்கப்பூர் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏற்பாடு செய்தபடி நடக்கும்பட்சத்தில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அனைவருக்கும் தேவையான அளவுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைத்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கே: நேர முன்பதிவு ஏதும் செய்யாமல் என்னால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியுமா?
ப: தடுப்பூசி மருந்தை மிகக் குளிர்ந்த வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டியதாலும் ஒரு போத்தலில் இருக்கும் மருந்தை ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு செலுத்த வேண்டும் என்பதாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதி அவசியம். முன்பதிவு தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
கே: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு முகக்கவசம் அணிய வேண்டிய தேவை உள்ளதா? பாதுகாப்பான இடைவெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?
ப: தடுப்பூசி மருந்துகள் 100% திறன்மிகுந்தவை என உறுதியளிக்க முடியாது என இணைப் பேராசிரியர் லிம் போ லியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தடுப்பூசி போட்ட பிறகும்கூட சிலருக்கு கொவிட்-19 தொற்று ஏற்படக்கூடும் என்பதையே இது காட்டுகிறது.
தடுப்பூசிகளை அனைவருக்கும் போட்டு முடிக்க நாளாகும். மருத்துவ ரீதியான பிரச்சினைகளால் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
உலகில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பு இன்னும் உறுதியாகாத நிலையில், வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு இங்கு கிருமித்தொற்று பதிவாவதும் நிகழ்கிறது.
இத்தகைய காரணங்களால் முகக்கவசம் அணிவதும் பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளும் முக்கியமானவையாக இருக்கும்.
கே: நான் தடுப்பூசி மருந்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா?
ப: இல்லை. தற்போது சிங்கப்பூரில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மட்டுமே உள்ளது. அதனைப் போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவிப்போருக்கு அட்டை ஒன்று வழங்கப்படும். அவர்களது தடுப்பூசி தொடர்பான தகவல்களை இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.
கே: தடுப்பூசி போட்டுக்கொள்ள என் முறை எப்போது வரும்? கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்னென்ன?
ப: முதலில் சுகாதாரப் பராமரிப்புத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். கடுமையான நோய்களால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி போடப்படும். முதலில் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும்.
கட்டுமானம், கப்பல் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களும் முன்னுரிமை பட்ட்யலில் உள்ளனர். தொற்று ஏற்படும் சாத்தியத்துடன் அதிக அபாயமுள்ள இந்தப் பிரிவினரைப் பாதுகாப்பதன் மூலம் சமூகத்தில் தொற்றுப் பரவல் குறையும்.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரர்களுக்கும் இங்கு நீண்டகாலம் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
கே: தடுப்பூசி போடுவதால் தழும்பு ஏற்படுமா?
ப: தழும்பு ஏதும் ஏற்படுவதாக இதுவரை தகவல் இல்லை.