புக்கிட் பாத்தோக்கில் உள்ள ரென் சி தாதிமை இல்லத்தின் 50 பணியாளர்களுக்கு இன்று கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் தேசிய அளவில் கொவிட்-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தேசிய தொற்றுநோய்கள் நிலையத்தின் முன்களப் பணியாளர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட்னர்.
அதனைத் தொடர்ந்து மற்ற பொது மற்றும் தனியார் சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களின் ஊழியர்களும் உள்துறை அமைச்சின் முன்கள அதிகாரிகளும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 52ல் உள்ள ரென் சி இல்லம்தான் சமூகப் பராமரிப்புத் துறையில் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடும் முதல் தாதிமை இல்லம். அதன் ஊழியர்களுக்கு ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி போடப்பட்டது.
அந்த இல்லத்தின் உதவி இயக்குநர் திருவாட்டி எல்சி டியோ அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர்.
தற்போது நடப்பில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி கூடுதல் நம்பிக்கை தருவதாக 66 வயதான திருவாட்டி எல்சி குறிப்பிட்டார்.
ரென் சியின் இரண்டு தாதிமை இல்லங்கள், அதன் சமூக மருத்துவமனை ஆகியவற்றில் பணிபுரியும் 80 விழுக்காட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என ரென் சி மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோ ஹாவ் தெரிவித்தார்.
சமூக பராமரிப்புத் துறையில் தடுப்பூசி போடும் பணி ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவையால் மேற்பார்வையிடப்படுகிறது.
அங் மோ கியோவில் இருக்கும் ரென் சி தாதிமை இல்லம் அதன் சமூக மருத்துவமனை ஆகியவற்றின் ஊழியர்களுக்கு வரும் வாரங்களில் தடுப்பூசி போடப்படும்.