சிங்கப்பூரில் புதிதாக 17 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 58,946ஆக உயர்ந்து உள்ளது.
புதிதாக கிருமி தொற்றியவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சமூக அளவிலோ வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ புதிதாக எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், 22 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒன்று, இரண்டு வயதுகளில் இரு பெண் குழந்தைகளும் அந்த 22 பேரில் அடங்குவர்.
அந்த ஒரு வயது குழந்தை குறுகியகால வருகை அனுமதி உடையவர். அந்த 2 வயது குழந்தை சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருக்கிறார். அவ்விரு குழந்தைகளிடமும் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்குத் தொற்று உறுதியானது.
இதற்கிடையே, கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இருவருக்கு ‘நியூஓஷன் 6’ கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்பு இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்கள் கப்பல் ஒன்றில் பணியாற்றியவர்கள். முன்னதாக கிருமித்தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அவர்களுக்குத் தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்குத் தொற்று உறுதியானது.
‘நியூஓஷன் 6’ கிருமித்தொற்றுக் குழுமத்தில் இதுவரை மொத்தம் 11 பேருக்குத் தொற்று உறுதியாகி உள்ளது.
‘நியூஓஷன் 6’ குழுமத்துடன் ஒன்பது தொற்றுச் சம்பவங்களுக்கு தொடர்பு இருப்பதாக சுகாதார அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து அந்நிறுவனம் தனது செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திக்கொண்டு உள்ளது.