சீனப் புத்தாண்டு அலங்காரத்துக்காக சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்ட ‘சீனர்களின் அதிர்ஷ்டக் கடவுள்’ உருவச் சிலைகளுக்குள் வரி செலுத்தப்படாத கள்ள சிகரெட்டுகளை சட்டவிரோதமாக மறைத்து கொண்டு வந்ததை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பார்ப்பதற்கு அழகாகக் தோன்றிய அந்த மண் சிலைகளை அதிகாரிகள் ஊடுகதிர்ச் சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் வித்தியாசமாக ஏதோ தென்படுவதை உணர்ந்தனர். பின்னர் பரிசோதித்ததில் வரி செலுத்தப்படாத 11,285 கார்ட்டன் மற்றும் 7,685 பொட்டலம் கள்ள சிகரெட்டுகள் அவற்றுக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த லாரி மலேசியாவில் பதிவு செய்யப்பட்டது என்று கூறப்பட்டது.
அக்கறைக்குரிய மற்ற பொருள்களையும் இவ்வாறு கடத்தும் முயற்சி எடுக்கப்படலாம் என்று குறிப்பிட்ட சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், இந்த வழக்கை சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைத்துள்ளது.
சிங்கப்பூரின் பாதுகாப்பைக் கருதி பயணிகள், பொருள்கள், வாகனங்கள் என அனைத்தையும் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் பரிசோதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.