பூங்காக்களில் உள்ள முகாம் பகுதிகளும் இறைச்சி வாட்டும் இடங்களும் ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளன.
பயன்பாட்டுக்காக விண்ணப்பம் செய்யும் நடைமுறை கடந்த புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 14 முகாம் பகுதிகளுக்கும் 29 இறைச்சி வாட்டும் இடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டதாக தேசிய பூங்கா வாரியம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
கொவிட்-19 நிலைமை குறித்த அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் அண்மைய ஆலோசனைக்கு இணங்க, தேசிய பூங்கா வாரியம் அதன் மொத்த முகாம் பகுதிகள், இறைச்சி வாட்டும் இடங்களில் பாதியை மீண்டும் திறக்க உள்ளதாக வாரியத்தின் குழு இயக்குனர் சோபியான் ஆரிப் தெரிவித்தார்.
ஈஸ்ட் கோஸ், பாசிர் ரிஸ், வெஸ்ட் கோஸ்ட் ஆகிய பூங்காக்களில் இடங்களில் முகாம் அமைக்கும் இடங்களுக்காகவும், சாங்கி பீச், செம்பவாங், வெஸ்ட் கோஸ்ட் உள்ளிட்ட ஏழு பூங்காக்களில் இறைச்சி வாட்டும் இடங்களுக்கும் விண்ணப்பங்களை வாரியத்தின் இணையதளத்தில் பெறலாம். இந்த இணையதளத்தில் உபின் தீவில் முகாம் அமைக்கவும் அனுமதி பெறலாம்.
ட்ரேஸ்டுகெதர் செயலி அல்லது வில்லைப் பயன்படுத்தி வருகைப் பதிவு செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பாதுகாப்பான தூர இடைவெளியை உறுதிசெய்ய, முகாம் கூடாரங்கள் குறைந்தது ஐந்து மீ இடைவெளியில் அமைக்க்பபட வேண்டும். ஒரு விண்ணப்பத்தில் ஆறு பேருக்கே முகாமில் தங்க அனுமதி வழங்கப்படும்.
கொவிட்-19க்கு முன்னரும் ஒரு முகாமுக்கு அறுவரே அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு இறைச்சி வாட்டும் இடத்துக்கும் எட்டு பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். நண்பகல் முதல் இரவு 10.30 மணி வரை அனுமதி செல்லுபடியாகும். இந்த நடவடிக்கைகள் உணவு, பான விற்பனை நிலையங்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஒத்தவை என்று திருமதி சோபியான் கூறினார்.
“பயனாளர்கள் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது அல்லது உணவு, பானம் அல்லது மருந்துகளை உட்கொள்ளும் நேரங்களைத் தவிர்த்து ஏனைய நேரங்களில் முகக்கவசம் அணிவது போன்ற மற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 1 மீட்டார் பாதுகாப்பான தூர இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என்று சோபியான் கூறினார்.
வெவ்வேறு குழுக்களுக்கிடையில் எந்தவிதமான தொடர்பும் இருக்கக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“பூங்கா செல்லும் அனைவரும் சமூகப் பொறுப்புடையவர்களாக, சிங்கப்பூரின் பசுமையான இடங்களை அனைவருக்கும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று சோபியான் கூறினார்.
பூங்கா செல்ல விரும்புவோர் அங்கு பாதுகாப்பு இடைவெளி குறித்த அண்மைய விதிமுறைகளை ஃசேவ் டிஸ்டான்ஸ@பார்க்ஸ் இணையத்தளத்தைப் பார்க்கலாம்.
தோட்டங்கள், பூங்காக்கள், இயற்கை பராமரிப்பு பகுதிகளுக்கா அண்மைய கொவிட்-19 ஆலோசனைகளையும் தேசிய பூங்கா வாரியத்தின் இணையதளத்தில் காணலாம்.