சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 19) புதிதாக 30 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை கிருமி தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 59,157 ஆகக் கூடி இருக்கிறது.
புதிதாக கிருமி தொற்றியோரில் 26 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.
உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் எவரும் பாதிக்கப்படவில்லை.
இதனிடையே, நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேரில் இருவர் உள்ளூர் சமூகத்தில் வசிப்போர்.
அவர்கள் இருவரும் போலிஸ் துணை விலங்கு நல மருத்துவ அதிகாரியுடன் தொடர்புடைய குழுமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் 43 வயது இல்லத்தரசி. சிங்கப்பூரரான அவரது கணவருக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவருக்கு இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்தே ஜலதோஷம், சுவை உணர்வு குறைவு, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு போன்ற கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டபோதும் அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
அதேபோல, மற்றொரு நபரான 66 வயது மலேசிய மாது கடந்த 9ஆம் தேதி முதல் கிருமித்தொற்று அறிகுறிகள் இருந்தபோதும் சிகிச்சை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. அவர் கடந்த ஆண்டு ஜனவரி முதல் சிங்கப்பூரில் நீண்டகால வருகை அனுமதியில் இருப்பவர்.
இவர்கள் இருவரும் ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 44 வயது சிங்கப்பூரரின் குடும்ப உறுப்பினர்கள். அந்தக் குழுமத்தில் மொத்தம் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மற்ற 12 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள், நால்வர் நிரந்தரவாசிகள், ஒருவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், ஒருவர் மாணவர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், நால்வர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர்.