சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உள்ள சில துறைகளில் பயின்று வரும் மாணவர்களுக்குக் கூடுதல் தொழிற்துறைப் பயிற்சிகள் வழங்கப்படும்.
மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி இந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு தொழிற்துறைப் பயிற்சி சார்ந்த பாடத்திட்ட கல்விப் பாதையை அது அறிமுகப்படுத்தியது. அதில் இரண்டு பட்டயச் சான்றிதழ் கல்வித் திட்டங்களைச் சேர்ந்த சில மாணவர்கள் பங்கெடுத்தனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பத்து மாணவர்களும் வாசனைத் திரவம், ஒப்பனை அறிவியல் துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் இப்பயிற்சித் திட்டத்தில் பங்கெடுத்தனர்.
இந்த மாணவர்கள் வழக்கமான வகுப்புச் சூழலில் மட்டுமே பயிலாமல் அவர்கள் பயிலும் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.
மூன்று ஆண்டு பாடத்திட்டத்தில் மாணவர்கள் கல்விக்காக செலவிடும் மொத்த நேரத்தில் பாதி நேரம் அனுபவக் கல்வித் திட்டத்துக்குப் போகும்.
இவ்வாண்டு இப்புதிய உத்தி மூலம் இரண்டு துறைகளைச் சேர்ந்த 70 மாணவர்கள் பலனடைவர் என்று சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் துணைத் தலைமையாசிரியர் லிம் பெங் ஹன் கூறினார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்பின்போது வகுப்பறைக் கற்றலுக்குப் பதிலாக குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மாணவர்கள் நிஜ வாழ்க்கை வேலைத் திட்டங்கள், வேலை அனுபவப் பயிற்சிகளில் ஈடுபடுவர்.