அனைத்துலக விமானப் பயணத்துக்கு ஆசியாவிலேயே மிகவும் பரபரப்பான, சுறுசுறுப்பான விமான நிலையம் என்று பெயரெடுத்த ஹாங்காங், கடுமையானச் சரிவைச் சந்தித்துள்ளது.
இதேபோல ஆசியாவின் பரபரப்பான விமான நிலையமாக விளங்கிய சாங்கியும் ஒரு படி கீழே இறங்கியுள்ளது.
இந்த இரண்டு விமான நிலையங்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ள தென்கொரியாவின் இன்ச்சியான் அனைத்துலக விமான நிலையம் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது.
இருந்தாலும் தென்கொரியாவும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவான சுற்றுப் பயணிகளையே கையாண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்துக்கு 8.84 மில்லியன் பயணிகள் வந்தனர்.
ஆனால் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது, 88 விழுக்காடு சரிவாகும்.
இதனால் முன்னணியில் இருந்த ஹாங்காங்கின் விமான நிலையம் கீழே இறங்கியுள்ளது.
அதாவது முதல் இடத்துக்கு முன்னேறிய சோலின் இன்ச்சியான், 2வது இடத்தில் உள்ள சிங்கப்பூரின் சாங்கி ஆகியவற்றுக்கு அடுத்தாக ஹாங்காங் 3வது இடத்துக்கு வந்துள்ளது.
இன்ச்சியான் விமான நிலையம், கடந்த ஆண்டு 11.96 பயணிகளைக் கையாண்டது. இதையடுத்து முதல் முறையாக பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இன்ச்சியான் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அதே ஆண்டில் சாங்கி விமான நிலையம் மொத்தம் 11.8 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.
முதல் மூன்று இடங்களில் உள்ள மூன்று விமான நிலையங்களும் 2019ல் 60 மில்லியன் பயணிகளை கையாண்டன. ஆனால் கொள்ளை நோய்ப் பரவல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை அடிமட்டத்தைத் தொட்டது.
ஹாங்காங்கும் சிங்கப்பூரும் உள்ளூர்ச் சந்தைகள் இல்லாததால் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
மேலும் கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளால் சாங்கி வழியாக பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.
இதற்கும் மேலாக ஹாங்காங்கில் 2019ஆம் ஆண்டின் பிற்பாதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் குறைத்துவிட்டது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரும் ஹாங்காங்கும் விமானச் சேவைகளைத் தொடங்க திட்டமிட்டன. ஆனால் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்ததால் அத்திட்டத்திலும் தொய்வு ஏற்பட்டது.
மற்றொரு நிலவரத்தில் ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையமாக விளங்கிய பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையமும் அத்தகுதியை இழந்துவிட்டது.
கடந்த ஆண்டு இங்கு 73 விழுக்காட்டுக்கு மேல் பயணிகளின் வருகை சரிந்தது. இதனால் இஸ்தான்புல் மற்றும் பாரிஸ் விமான நிலையத்துக்கு அடுத்ததாக ஹீத்ரோ இடம்பெற்றுள்ளது.