சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 21) நண்பகல் நிலவரப்படி புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 34 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
அவர்களில் 33 பேர் இங்கு வந்த பிறகு வீட்டிலேயே தனிமையில் இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
எஞ்சிய ஒருவருக்கு இம்மாதம் 17ஆம் தேதி சிங்கப்பூர் வந்தபோது தொற்று இல்லை. இருந்தாலும் அவருக்குச் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
தொடர்ந்து பரிசோதனை நடத்தப்பட்டபோது அவருக்கு கொவிட்-19 தொற்று இருந்தது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
மற்ற நால்வரும் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள். வெளிநாட்டு ஊழியர் விடுதியில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை என்று அமைச்சு தெரிவித்தது.
புதன்கிழமையன்று புதிய உள்ளூர் கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்றைப் பற்றி அமைச்சு அறிவித்தது. அந்த நாளில் வெளிநாடுகளில் இருந்து வந்த 36 பேருக்குத் தொற்று இருந்தது. 32 பேர் குணமடைந்தனர்.
இவர்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,911 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 45 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகிறார்கள்.
தீவிர கண்காணிப்புப் பிரிவில் ஒருவர் இருக்கிறார். சமூக நிலையங்களில் 197 பேர் குணமடைந்து வருகிறார்கள்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,195 ஆக இருக்கிறது.
கொவிட்-19 நோய்க்கு மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கர் 15 பேர்.