கொரோனா கிருமிப் பரவல் காலத்தில் வெளிப்புற நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூரர்களின் உடல் பருமனும் அதிகரித்துள்ளது.
சராசரியாக சுமார் 5 கிலோ வரை உடல் எடை கூடியிருப்பதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
பெரும்பாலான நேரங்களில் வீட்டிலேயே இருக்க நேரிட்டாலும் அதனை ஈடுகட்டும் விதத்தில் உடற்பயிற்சியையும் அதிகரித்துள்ளாதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 10ல் நான்கு பேர் தெரிவித்துள்ளனர்.
இப்சோஸ் எனும் சந்தை ஆய்வு நிறுவனம் இணையம் வழியாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த அக்டோபர் 23 முதல் நவம்பர் 6 வரையிலான காலகட்டத்தில் 21 முதல் 74 வயதுக்குட்பட்ட 500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி எடுப்பதாகக் கூறினாலும் அவர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் அது கிருமித்தொற்று காலத்தில் ஏற்பட்ட உடற் பருமனுடன் தொடர்புடையதில்லை என்றனர்.
உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு ஒரு வழி என்றாலும் பெரும்பாலானவர்கள் இறைச்சி, மது போன்றவற்றை எடைக் குறைப்புக்காக விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
சிலர் இனிப்பு உட்கொள்வதைக் குறைத்துக் கொள்கின்றனர்.
உடல் எடை குறைப்புக்காக மலிவான, ஆரோக்கியமான உணவுதான் பலரது தேர்வாக உள்ளது. கூடுதல் வெளிப்புற நடவடிக்கைகளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஆரோக்கியமான பொருள்கள் சேர்க்கப்படுவதையும் சிலர் எதிர்பார்க்கின்றனர்.
“குறைந்த இனிப்பு, குறைந்த மாவுப்பொருள், குறைவான பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஆகியவற்றைக் கொண்ட உணவு வகைகளில் ஒரு சிலதான் கட்டுப்படியாகக்கூடிய விலைக்குள் இருக்கின்றன,” என்று இப்சோஸ் நிறுவனத்தின் மக்கள் விவகாரத்துறை இயக்குநர் திருவாட்டி மெலானி இங் குறிப்பிட்டார்.
“மலிவான ஆரோக்கியமான உணவுகள் கிடைத்தால் அது, சுகாதார குறிக்கோள்களை சிங்கப்பூரர்கள் அடைவதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார் அவர்.