குடும்ப வன்முறை தொடர்பான 5,135 புகார்கள் கடந்த ஆண்டில் கிடைக்கப்பெற்றன என்று போலிஸ் தெரிவித்து உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் கடப்பாட்டின் ஒரு பகுதியாக போலிஸ் நேற்று இந்தத் தகவல்களை வெளியிட்டது.
தெரிவிக்கப்பட்ட புகார்களில் குடும்ப சேவை நிலையங்களுக்கும் அல்லது குடும்ப வன்முறை நிபுணத்துவ நிலையங்களுக்கும் 1,115 புகார்கள் மாற்றிவிடப்பட்டன.
வேண்டுமென்றே காயங்களை விளைவித்தல், தாக்குதலை மேற்கொள்ளுதல், மிரட்டுதல், சுதந்திரமான ஒருவரை வெளியே நடமாடவிடாமல் தடுத்து வைத்தல் போன்ற குற்றங்களும் அவற்றில் அடங்கும்.
பிடோக் போலிஸ் பிரிவுக்கு நேற்று வருகையளித்த உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 10% விகிதத்தில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்தன என்றார்.
இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று கூறிய அமைச்சர், கொவிட்-19 காலத்தில் மக்கள் அதிக நேரம் வீட்டிலியே இருந்ததால் இதன் சாத்தியம் அதிகரித்தது என்றார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரை குடும்ப வன்முறைக் குற்றங்கள் தொடர்பிலான 476 புகார்கள் கிடைக்கப்பெற்றன என்று தெரிவித்த போலிஸ், கொவிட்-19 நோய்முறியடிப்பு காலத்துக்கு முன் அதாவது ஏப்ரல் 7ஆம் தேதிக்கு முன் 380 புகார்கள் கிடைக்கப்பெற்றன என்றும் இது 22% மாதாந்திர அதிகரிப்பு என்றும் கூறியது.
உள்துறைக் குழு, சமூக உதவி மற்றும் பரிந்துரைத் திட்டத்தின் அடிப்படையில் போலிஸ் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ள சமூக ஊழியர்கள், குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்களை அணுகி, அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, தகுந்த உதவி அளிப்பார்கள் என்றும் டாக்டர் ஃபைஷல் கூறினார்.