சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 23) நண்பகல் நிலவரப்படி புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
இன்று உள்ளூர் சமூகத்திலோ விடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை.
சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், காலாங்கில் உள்ள ‘பிஎஸ் இண்டஸ்ட்ரியல் & கன்ஸ்ட்ரக்ஷன் சப்ளை’ என்ற நிறுவனத்துடன் தொடர்புடைய கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்தவர்.
மலேசியரான அம்மாது அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் பணிபுரிகிறார்.
இதையும் சேர்த்து அந்தக் குழுமத்தில் தற்போது 8 பேருக்கு கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேரில் ஒருவர் 29 வயது மாது. வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு பணிபுரியும் அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சிப்பந்தி.
ஜனவரி 12, 13 தேதிகளில் வேலை நிமித்தம் இங்கிலாந்துக்கு சென்ற அவர், 14ஆம் தேதி சிங்கப்பூருக்குத் திரும்பினார்.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட எஞ்சிய 13 பேரில் இருவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் நிரந்தரவாசி, ஒருவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்பவர், அறுவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், ஒருவர் குறுகியகால வருகை அனுமதி உடையவர், இருவர் சிறப்பு வருகை அனுமதி உடையவர்கள்.
உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏழு நாட்களில் உள்ளூர் சமூகத்தில் 21 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய 7 நாட்களில் அந்த எண்ணிக்கை 2 மட்டுமே.
இவர்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,968 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 41 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகிறார்கள்.
தீவிர கண்காணிப்புப் பிரிவில் ஒருவர் இருக்கிறார். சமூக நிலையங்களில் 197 பேர் குணமடைந்து வருகிறார்கள்.
கொவிட்-19 நோய்க்கு மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கள் 15 பேர்.