2018ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டு காலகட்டத்தில் எலிசபெத் போ சியூ லியென் என்பவர் நான்கு இல்லப் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தினார். அவர்களில் இருவரை வெவ்வேறு சம்பவங்களில் இவர் துன்புறுத்தினார்.
இந்தோனீசியப் பணிப்பெண்ணின் கையில் கிள்ளியது, காலணியைக் கொண்டு அவரது முதுகில் அடிப்பது, அவரது தலையில் தண்ணீரை ஊற்றுவது, அவரைத் தரக்குறைவாக திட்டுவது போன்ற செயல்களை போ புரிந்தார்.
போவின் துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல் 2018 ஜூலை 22ஆம் தேதி அந்தப் பணிப்பெண் வீட்டைவிட்டு வெளியேறி போலிசிடம் புகார் அளித்தார்.
அதையடுத்து, மியன்மாரைச் சேர்ந்த வேறொரு பணிப்பெண்ணை போ பணியமர்த்தினார். அந்தப் பணிப்பெண்ணுக்கு எதிராகவும் போவின் துன்புறுத்தல் தொடர்ந்தது. 2019 மார்ச் 8ஆம் தேதி இதுகுறித்து தமது சகோதரரிடம் அப்பணிப்பெண் தெரியப்படுத்தினார். பின்னர் போலிசிடம் புகார் அளிக்கப்பட்டது.
இரு பணிப்பெண்களைத் துன்புறுத்தியதாக போ, 67, குற்றத்தை ஒப்புக்கொண்டார். போவுக்கு குறைந்தது ஆறு வார சிறைத் தண்டனை விதிக்க அரசு தரப்புத் துணை வழக்கறிஞர் குவாங் ஜியா மின் நீதிபதியிடம் வலியுறுத்தினார்.
“இக்குற்றங்கள் காரணமாக இரு பணிப்பெண்களுக்கும் காயம் ஏற்பட்டதால், இழப்பீட்டுத் தொகையாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் $500 வழங்கப்பட வேண்டும் என்ற வாதத்தை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்,” என்றார் அவர்.
இதுபோக, அந்தப் பணிப்பெண்களின் வருமான இழப்பிற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் $2,000க்கும் மேல் வழங்கப்படவும் அவர் வலியுறுத்தினார்.