நீரிழிவு காரணமாக கண்களில் ஏற்படும் பிரச்சினைகளைத் திறம்பட ஆய்வு செய்ய ‘டயபெட்ஸ் சிங்கப்பூர்’ அமைப்பு செயற்கை நுண்ணறிவுச் சாதனம் ஒன்றை செயற்படுத்த உள்ளது. கண்களில் எடுக்கப்படும் ‘ஸ்கேன்’ படங்களை சில நிமிடங்களுக்குள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கக்கூடியது அது. பொதுவாக இத்தகைய ஆய்வுகளுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் நீரிழிவு தொடர்பான கண் பிரச்சினைகளுக்காக சுமார் 11,000 நோயாளிகளின் கண்களை பரிசோதனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 8,000 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது என ‘‘டயபெட்ஸ் சிங்கப்பூர்’ அமைப்பு இன்று (ஜனவரி 27) தெரிவித்தது.
உள்ளூர் நிறுவனமான EyRIS உருவாக்கிய Selena+ எனும் செயற்கை நுண்ணறிவுச் சாதனம் டயபெட்டிக் ரெட்டினோபதி, குளூகோமா, வயது தொடர்பான விழிப்புள்ளி சிதைவு எனும் மூன்று விதமான கண் நோய்களைக் கண்டறியும்.
இந்த செயற்கை நுண்ணறிவுச் சாதனம் 90% துல்லியத்துடன் செயல்படக்கூடியது.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் பலதுறை மருந்தகங்களில் அனைத்து நீரிழிவு தொடர்பான கண் பரிசோதனை ஆய்வுகளும் இந்த செயற்கை நுண்ணறிவுச் சாதனத்தைக் கொண்டுதான் ஆராயப்பட்டன.
‘டயபெட்ஸ் சிங்கப்பூர்’ நிறுவனம் நான்கு Selena+ நுண்ணறிவுச் சாதனங்களை வாங்கியுள்ளது. அவற்றில் 2 பூன் கெங், ஜூரோங்கில் இருக்கும் அதன் நிலையங்களில் உள்ளன. மற்ற இரண்டும் அதன் நடமாடும் பரிசோதனை வாகனங்களில் வைத்து தீவு முழுவதும் பல்வேறு பொது மருந்தகங்களில் நடத்தபப்டும் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும்.
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் ஆண்டுக்கொருமுறை கண் பரிசோதனை செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். அதன் மூலம் கண் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சைக்கு அனுப்பப்படலாம்.