பகுதிமின்கடத்தி நிறுவனமான மைக்ரோன் டெக்னாலஜி அடுத்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் 1,500 உயர்திறன் ஊழியர்களை வேலையில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
நார்த் கோஸ்ட் டிரைவில் இருக்கும் அதன் ஆலையை மைக்ரோன் விரிவாக்கம் செய்துள்ளது. வேலைக்கு எடுக்கப்படும் இந்த உயர்திறன் ஊழியர்கள் அங்கு பணிபுரிவர்.
சில்லுகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் அவற்றை உற்பத்தி செய்ய வேலைக்கு ஆட்களை எடுப்பதாகவும் மைக்ரோன் டெக்னாலஜி நிறுவனத்தின் உலகளாவிய இயக்கப் பிரிவின் நிர்வாக துணைத் தலைவரான மனிஷ் பாட்டியா தெரிவித்தார்.
கொள்முதல், உலகளாவிய தரம், விநியோகம் ஆகியவற்றுக்கும் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டில் நிலைமை மேம்படும் என்று மைக்ரோன் டெக்னாலஜி நிறுவனம் நம்பிக்கை கொண்டிருப்பதால் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதாக திரு பாட்டியா கூறினார்.
சிங்கப்பூரின் மின்னணுவியல் உற்பத்தி 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.9 விழுக்காடு அதிகரித்தது.