சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கடந்த சில வாரங்களில் மருத்துவ சிகிச்சை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சளிக்காய்ச்சல் பருவகாலம் தொடர்புடையது என்பதாலும் கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பலரும் இத்தகைய சிகிச்சைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சின் வாராந்திர தொற்று நோய் செய்தியறிக்கை 2020ன்படி, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், பலதுறை மருந்தகங்களில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளில் பாதிக்கும் குறைவானோர் ARI எனப்படும் கடும் மூச்சு தொற்றுப் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது.
நல்ல தனிநபர் சுகாதரம், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற காரணங்கள் இந்த எண்ணிக்கை குறைவுக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும் சிலர் அத்தகைய நடைமுறைகளைக் கைவிடத் தொடங்கியுள்ளனர்.
கடந்த மாதத்தில் ARIக்கு சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. சராசரியாக தினமும் 869 அத்தகைய நோயாளிகள் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் சிகிச்சை பெற்றனர். ஆனால் ஜனவரி 17 முதல் 23க்கு இடைப்பட்ட காலத்தில் அத்தகைய நோயாளிகளின் தினசரி சராசரி 1,423 ஆக உயர்ந்தது.
மூக்கடைப்பு, மூக்கில் சளி, தும்மல், தொண்டை வலி, இருமல் போன்றவை ARIன் அறிகுறிகள்.
சில தனியார் மருந்தகங்களில் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டறிந்தபோது, கடந்த சில வாரங்களில் ARIக்கு சிகிச்சை பெற்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிகிறது.