சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 3) நண்பகல் நிலவரப்படி புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் ஒருவர் மட்டும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்தவர். மற்ற 17 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
இன்று விடுதிகளில் புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 19 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்களில் 16 பேருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை.
அவர்களில் மூவர் ஒன்று முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள், மூவர் நிரந்தரவாசிகள்.
மூவர் சார்ந்திருப்போர் அனுமதி அட்டை வைத்திருப்போர்; 5 பேர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர்; மூவர் குறுகியகால வருகை அனுமதி உடையவர்கள்; ஒருவர் வேலை நிமித்தம் சிறப்பு அனுமதியில் வந்தவர்.
இங்கு மொத்தம் 59,286 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 44 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
210 பேர் சமூகப் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொவிட்-19 நோயினால் இதுவரை மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களால் மாண்டவர்கள் 15 பேர்.
உலக அளவில் இதுவரை 103 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.