இந்தியாவிலிருந்து நீண்டகால வருகை அனுமதியுடன் சிங்கப்பூருக்கு வந்த 35 வயது மாதுதான் சிங்கப்பூரின் உள்ளூர் சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரே ஆள்.
அவரும் வெளிநாட்டிலிருந்து வந்து கிருமி தொற்றியவர்களின் பட்டியலுக்கு மாற்றப்படக்கூடும் என்று தெரிவித்த சுகாதார அமைச்சு, அவரது ‘சீராலஜி’ பரிசோதனை முடிவுகள் இன்னும் பெறப்படவில்லை என்றது.
அவரது சீராலஜி பரிசோதனை முடிவுகள், அவருக்கு முன்பு கிருமித்தொற்று ஏற்பட்டிருந்ததை உறுதிப்படுத்தினால் அவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு கிருமி தொற்றிய பட்டியலுக்கு மாற்றப்படுவார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி அவர் இந்தியாவுக்குச் சென்றார்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கிளம்பும் முன்பு, ஜனவரி 4 அன்று அவர்க் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்குத் தொற்று இல்லை.
இங்கு வந்த பிறகு ஜனவரி 6 முதல் 20ஆம் தேதி வரை இங்கு வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவை நிறைவேற்றினார். ஜனவரி 17ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையிலும் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.
இந்தியாவுக்குத் திரும்பிச் செல்வதற்குத் திட்டமிட்ட அவர், அதற்கு முன்பாக கிருமித்தொற்று பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை.
கிருமித்தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதும் கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.