சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 4) நண்பகல் நிலவரப்படி புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
இன்று விடுதிகளிலோ, உள்ளூர் சமூகத்திலோ புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 18 பேரில் ஒருவர் மட்டும் உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர். இந்தியாவிலிருந்து திரும்பி 14 நாட்களுக்கு வீட்டிலிருக்கும் உத்தரவை நிறைவேற்றிய 2 வாரங்களுக்குப் பிறகு அவருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவரது ‘சீராலஜி’ பரிசோதனை முடிவுகள் இன்னும் பெறப்படவில்லை.
நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட மற்ற 17 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
இங்கு மொத்தம் 59,305 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 39 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
214 பேர் சமூகப் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொவிட்-19 நோயினால் இதுவரை மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களால் மாண்டவர்கள் 15 பேர்.
உலக அளவில் இதுவரை 103 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.