சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 10) நண்பகல் நிலவரப்படி புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 14 பேர் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஒருவர் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்.
உள்ளூர் சமூகத்தில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்று திரும்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சிப்பந்தியான 41 வயது பெண்ணுக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடையே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஐந்தாவது நபர் அவர். அவர் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோசை இம்மாதம் 2ஆம் தேதி போட்டுக்கொண்டவர். ஜனவரி 30ஆம் தேதி விமானம் மூலம் துபாய்க்குச் சென்று, விமானத்தில் இருந்து இறங்காமலேயே சிங்கப்பூருக்கு பிப்ரவரி 1 அன்று திரும்பினார் அவர்.
அந்த ஐவரும் அதிக பரவும் தன்மை கொண்ட B117 எனும் உருமாறிய கொரோனா தொற்று ஆளானவர்கள் என முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த உருமாறிய கிருமித்தொற்று கண்ட மற்ற நால்வரும் அந்த விமானத்தின் பயணிகள். அவர்கள் அனைவரும் சார்ந்திருப்போர் அனுமதியுடன் இங்கு இந்த மாதத் தொடக்கத்தில் வந்தவர்கள். அவர்களில் மூன்று வயது சிறுமி, ஒரு வயது சிறுவன் ஆகியோரும் அடங்குவர்.
அந்த விமான சிப்பந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்ற 10 பேரும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
கொவிட்-19 நோயினால் இதுவரை மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களால் மாண்டவர்கள் 15 பேர்.
உலக அளவில் இதுவரை 106 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.