கொவிட்-19 கிருமிப்பரவலின்போது அனைத்துலக தளவாட நடைமுறைகளில் ஏற்பட்ட இதுவரையில்லாத பெரும் மாற்றங்கள் அனைத்துலக வர்த்தக போட்டித்தன்மையைப் பாதிக்கும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் இன்று (பிப்ரவரி 16) தமது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்கள், சில மாதங்களுக்குள்ளாக தடுப்பூசிகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கூட்டுமுயற்சி, கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள நன்மை என்று திரு ஹெங், நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் தெரிவித்தார். ஆனால் இக்கிருமிப்பரவல், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொழில்நுட்பத் துறையில் முதன்மை பெறுவதற்கான போட்டியை முடுக்கிவிட்டதாகவும் இதனால் தளவாடத்துறையின் மீள்திறன் குறித்த கவலைகள் எழலாம் என்றும் அவர் கூறினார்.
கொவிட்-19 கிருமிப்பரவலால் நாடுகளின் மீதும் சமூகத்தின் மீதும் ஏற்பட்டுள்ள தாக்கம் ஒரே சீராக இல்லாமல் வெவ்வேறு அளவில் இருக்கின்றன. கொவிட்-19 கிருமிப்பரவலின் சாயலுக்குள் நாடுகள் தொடர்ந்து இருக்கும்வரை உலகப் பொருளியலின் வளர்ச்சியில் தடங்கல் ஏற்படும். எனவே சிங்கப்பூருடன் ஒருமித்த மனப்போக்கு உடைய நாடுகளுடன் ‘கோவேக்ஸ்’ அனைத்துலகத் தளவாட வசதியுடன் இந்நாடு செயல்பட்டு தடுப்பூசிகள் பிறருக்குச் சென்று சேர்வதற்கு உதவி செய்வதன் மூலம் பாதுகாப்பான பயணங்களின் தொடர்ச்சிக்கு பங்களிக்கும் என்று திரு ஹெங் கூறினார்.
சுற்றுச்சூழலின் பல்வேறு பகுதிகள் ஒன்றையொன்று நம்பியிருப்பதையும் நிலைத்தன்மை மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை முக்கியம் என்றும் இந்தக் கிருமிப்பரவல் நினைவூட்டுவதாக திரு ஹெங் தெரிவித்தார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து, எளிதில் உடையக்கூடிய இந்தச் சுற்றுச்சூழலைக் கட்டிக்காக்க ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும் பருவநிலை மாற்றத்தை முக்கியமாகக் கருதவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.