கிருமி தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள விமான துறை, இவ்வாண்டு $870 மில்லியன் அளவிலான கூடுதல் நிதியாதரவைப் பெறும்.
விமானத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து அது மீண்டு வர இன்னும் சில காலம் எடுக்கக்கூடும் என்றும் இவ்வாண்டும் அதன் மோசமான நிலை தொடரக்கூடும் என்றும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
இந்த $870 மில்லியன் நிதி, கொவிட்-19 மீட்சித் தொகுப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள $11 பில்லியனின் ஒரு பகுதியாகும்.
நிதி உதவித் தொகையின் ஒரு பகுதி, சிங்கப்பூருக்கு வருகை புரியும் விமானப் பயணிகளுக்கான பரிசோதனைக்கும், பாதுகாப்பு உபகாரணங்களைப் பெறுவதற்காகவும் பயன்படுத்தப்படும் என்றார் திரு ஹெங்.
பயணிகள் மற்றும் ஊழியர்கள் நம்பக்கூடிய ஒரு நம்பகரமான விமான மையமாக சிங்கப்பூரின் நிலையை பாதுகாக்க இந்த திட்டங்கள் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
“விமான நிலையங்கள், எந்த அளவில் பொது சுகாதாரத்தைப் கடைப்பிடிக்கின்றன, எவ்வகையில் பாதுகாப்பான பயணத்தை செயல்படுத்துகின்றன போன்றவற்றில் வேறுபடுத்தப்படுகின்றன. கொவிட் -19 உலகளாவிய இணைப்பை மாற்றியமைத்துள்ளது. சாங்கி விமான நிலையம் வழியாக செல்லும் மொத்த பயணிகளின் எண்ணிக்கை ஜனவரி மாத இறுதியில் கொவிட் -19 க்கு முந்தைய எண்ணிக்கையில் 2 விழுக்காடாக இருந்தது. இருப்பினும், விமானத் துறை, அதன் திறன்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், மேம்படுத்தவும், மீட்புக்குத் தயாராகவும் இந்த நேரத்தை பயன்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.” என்று கூறினார் திரு ஹெங்.