கொவிட்-19 பாதுகாப்பு விதிமீறல்களின் தொடர்பில் உணவகத் தொடர் நிறுவனமான பனானா லீஃப் அப்போலோ மீது இன்று (பிப்ரவரி 17) மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் 5 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறது அந்த நிறுவனம்.
சுய சேவை 'புஃபே' விருந்து வழங்கியது, உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டவர்களிடையே பாதுகாப்பான இடைவெளியை நடைமுறைப்படுத்தத் தவறியது போன்றவை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் அவை என்று முன்பு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன.
கொவிட்-19 தொடர்பான பல விதிமீறல்களின் தொடர்பில் அந்த நிறுவனத்தின் மீது கடந்த ஜனவரி 20ஆம் தேதி சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்தது.
கொவிட்-19 தொடர்பான விதிமீறல்களுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 26 முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை அந்த உணவகத் தொடர் நிறுவனம் 10 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.
மேற்கொண்ட விசாரணைக்காக அந்த வழக்கு தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி இந்த வழக்கின் தொடர்பில் நிறுவனம் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

