மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 72 வயது ஆடவர் நேற்று முன்தினம் இரவு டான் டோக் செங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதாக நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நேற்று முன்தினம் அவர் ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கொவிட்-19 முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என டான் டோக் செங் மருத்துவமனையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மேற்கொண்டு பரிசோதனைகளை மருத்துவக்குழு நடத்தி வருகிறது.
புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், மிகைக் கொழுப்பு போன்ற பிரச்சினைகள் அவருக்கு இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டது.
தடுப்பூசி போடுவதற்கு முன்பு, அவருக்குத் தடுப்பூசி ஏற்புடையதா என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர் பரிசோதித்தார் என்று சுகதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
கொவிட்-19 தடுப்பூசி நடைமுறைகளின்படி, தடுப்பூசி போட்ட பிறகு கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
கொவிட்-19 தொற்றுப் பரவலால் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மூத்தோருக்கு தடுப்பூசி போட்டு அவர்களைப் பாதுகாப்பது முக்கியம் என்று குறிப்பிட்டது அமைச்சு.
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மூத்தோரிடையே உயிரிழப்பு அபாயத்தை அதிகரிப்பதற்கான ஆதாரம் எதையும் உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடிக்கவில்லை என்பதையும் அமைச்சு மேற்கோள் காட்டியது.