சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்திய நாட்டவர்கள் 15 பேரிடம் போலியான கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததற்காக விசாரிக்கப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
அவர்கள் இங்குள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மானவ் பாரதி பல்கலைக்கழத்தின் போலியான கல்விச் சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பித்ததாகக் கூறப்பட்டது.
அந்தப் பல்கலைக்கழகம் கடந்த 11 ஆண்டுகளாக 36,000 போலி கல்விச் சான்றிதழ்களை விற்றுள்ளதாக இம்மாதத் தொடக்கத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
மானவ் பாரதி பல்கலைக்கழகம் வழங்கியுள்ள 41,000 பட்டங்களில் 5,000 பட்டங்கள் மட்டுமே உண்மையானவை என்று இந்தியாவின் சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக அப்பல்கலையின் தலைவரான திரு ராஜ்குமார் ரானாவை ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வர இந்திய போலிஸ் முயன்று வருகிறது என்றும் அச்செய்தி கூறியது.
மேற்கூறப்பட்ட 11 பேர் போலியான கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்திருந்தது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் வேலை அனுமதிச் சீட்டு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் இனிமேல் சிங்கப்பூரில் வேலை செய்ய முடியாதபடி நிரந்தரத் தடை விதிக்கப்படும் என்று அமைச்சு விளக்கியது.
"வெளிநாட்டு ஊழியர் வேலைவாய்ப்புச் சட்டத்தின்படி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உண்டு. இந்தக் குற்றத்துக்கு $20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்," என்றும் அமைச்சு கூறியது.
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது போலியான கல்வித் தகுதியைத் தெரிவித்ததால், கடந்த ஐந்து ஆண்டுகள் கணக்குப்படி, ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 660 பேருக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஓர் ஆண்டில் எட்டு வெளிநாட்டினர் போலியான கல்வித் தகுதிகளைத் தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு, தண்டனை பெற்றுள்ளனர்.
தாங்கள் வேலைக்கு அமர்த்த விரும்பும் ஊழியர்கள் உண்மையான கல்வித் தகுதிகளைத் தெரிவிப்பதை உறுதி செய்யும் அடிப்படைப் பொறுப்பு முதலாளிகளிடம் இருக்க வேண்டும் என்று கூறிய அமைச்சு, தங்களுக்குக் கிடைக்கும் வேலை அனுமதி விண்ணப்பங்களைத் தானும் தனிப்பட்ட முறை யில் சோதனைகளை நடத்தி வரு வதாகத் தெரிவித்தது.

