ஹாங்காங்கில் கொரோனா தொற்றுச் சூழல் மேம்பட்டு வருவதையடுத்து, சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் இடையே விமானப் பயணத்துக்கான 'ஏர் டிராவல் பபள்' தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
சுற்றுப் பயணத்துக்காக இரு நாடுகளுக்கிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பயண ஏற்பாடு கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால், ஹாங்காங்கில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, பயணம் தொடங்குவதற்கு முந்தைய நாள், அந்தப் பயண ஏற்பாடு கால வரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டது.
முன்பு பயண ஏற்பாட்டுக்கு ஏற்பாடு செய்தபோது, இரு நாடுகளிலும் 7 நாள்களுக்கான 'தொடர்புத் தடம் அறியப்படாத' கொரோனா தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஐந்தைவிட அதிகரித்தால், பயண ஏற்பாட்டைத் தற்காலிகமாக ரத்து செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வாரத் தொடக்கத்தில், ஹாங்காங்கில் 7 நாள்களுக்கான 'தொடர்புத் தடம் அறியப்படாத' கொரோனா தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஐந்துக்குக் கீழ் குறைந்தது.
தற்போது அந்த அளவு 4.57 ஆக உள்ளது.
'ஏர் டிராவல் பபள்' தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று (பிப்ரவரி 20) தெரிவித்தது.
இது குறித்த கூடுதல் தகவல்கள் உரிய சமயத்தில் அறிவிக்கப்படும் என சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் டேனியல் இங் கூறினார்.

