அமெரிக்காவின் பிரபல ‘டெல் டெக்னாலஜிஸ்’ நிறுவனம் சிங்கப்பூரில் US$50 மில்லியன் (S$66 மில்லியன்) மதிப்பிலான ஆய்வு உருவாக்க நிலையத்தை இன்று (பிப்ரவரி 22) தொடங்கியது.
கணினித் தகவல்கள் சேகரிக்கப்படும் இடத்திலேயே அவற்றைச் சேமிப்பது, பகுத்து ஆராய்வது, செயல்படுத்துவது போன்றவற்றில் புத்தாக்கத்தை அந்த நிலையம் மேம்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் புதிய தொழில்நுட்பம் இங்கு நடப்புக்கு வருகின்ற 5ஜி தொழில்நுட்பத்தின் அனுகூலங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் என்று 'டெல்' தெரிவித்துள்ளது.
கணினித் தகவல்கள் சேகரிக்கப்படும் இடத்திலேயே அவற்றைப் பகுத்து ஆராய்ந்து குறிப்பிட்ட தகவல்களைத் தேர்ந்து எடுத்து பிறகு அத்தகவலை ஒரு கட்டமைப்பில் பதிவேற்றும் இத்தகைய தொழில்நுட்பத்திற்கான தேவை கூடி வருகிறது.
அப்படிப் பதிவேற்றப்படும் தகவல்களை வேறு ஓர் இடத்தில் பயனீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பம் இல்லை எனில் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தையும் முதலில் பதிவேற்றி அவற்றை வேறு இடங்களில் பகுத்து ஆராயவேண்டிய நிலை இருக்கும். இதற்கு அதிக செலவு பிடிக்கும்.
அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இத்தகைய தொழில்நுட்பம் வழக்கமானதாக ஆகிவிடும் என்றும் அப்போது டெல் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான சிங்கப்பூர் ஆய்வு உருவாக்கம் உலகம் முழுவதும் பரவும் என்றும் டெல் ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பான் பிரிவுக்கான தலைவர் அமித் மிதா கூறினார்.
“எதிர்காலத்தில் இத்தகைய அதே இட தகவல் பகுப்பாய்வுத் தொழில்நுட்பம் குறிப்பாக சிறிய நாடுகளுக்கு முக்கியமானதாக உருவெடுக்கும். அடுத்த தலைமுறைப் புத்தாக்கம் சிங்கப்பூரில் உருவாகி உலகம் முழுவதற்கும் பரவும்,” என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் செயல்படத் தொடங்கி இருக்கும் டெல் நிறுவனத்தின் ஆய்வு உருவாக்க நிலையம் ‘உலக புத்தாக்க மையம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
இப்படிப்பட்ட உலக மையங்களில் ஒன்றாகத் திகழக்கூடிய அந்த மையம், மின்னிலக்க உருமாற்றத்தில் முன்னேற்றங்களைச் சாதிப்பதிலும் ஒருமித்த கவனம் செலுத்தும்.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள அனைத்துலக தொழிற்பேட்டையில் அமைந்துள்ள அந்த மையத்திலும் சாங்கி தொழிற்பேட்டையிலும் டெல் செய்துள்ள முதலீடு காரணமாக 160க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும். அவற்றில் பெரும்பாலானவை சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கும்.
வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் அனைத்துலக தொழிற்பேட்டையில் அந்த மையத்தைத் தொடங்கி வைத்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து விடுபட்டு முன்பைவிட வலுவாக மீண்டு எழ சிங்கப்பூர் இப்போது எடுத்து வரும் முயற்சிகளுக்கு இந்தப் புதிய மையம் உறுதுணையாகத் திகழும் என்ற திரு சான், இத்தகைய தொழில்நுட்பங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து இவற்றில் அரசாங்கம் முதலீடு செய்யும் என்றும் கூறினார்.