சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையிலும் வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையிலும் படிக்க சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ஒரு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அந்தப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மின்சாரக் கார்கள் பற்றியும் முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயல்படும் கட்டடங்கள் பற்றியும் மேலும் பலவற்றையும் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
குழுக்களாகப் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ள சூழலில் அல்லது தங்களுடைய தொழில்நுட்பங்களைச் சந்தைப்படுத்தக் கூடிய சூழ்நிலைகளில் செயல்படும் ஆற்றலை உருவாக்கும் ஒரு புதிய கட்டாயப் பாடமும் அந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்று இருக்கும்.
தேசிய பல்கலைக்கழகத்தில் வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையில் சேரும் ஏறத்தாழ 1,800 புதிய இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஏழு மூலாதாரப் பாடங்களைப் படிப்பார்கள்.
அந்தப் பாடங்கள் பல துறைகளையும் உள்ளடக்கியவையாக இருக்கும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இரண்டு துறைகளுமே வேலைக்கு ஏற்ற தேர்ச்சிகளையும் அறிவையும் மாணவர்களிடம் ஏற்படுத்தும்.
ஆகஸ்ட் முதல் ஏறக்குறைய 7,000 தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத் திட்டங்களில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேசிய பல்கலைக்கழகம் கடந்த டிசம்பர் மாதம் மானிடவியல் மற்றும் அறிவியல் துறையைப் புதிதாகத் தொடங்கியது.
இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள் பொதுவான 13 பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும்.
அந்தப் பாடங்கள் பல்வேறு துறைகளையும் சேர்ந்தவை என்று பல்கலைக்கழகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.