ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்ததற்காகவும் குழந்தைகளிடம் தகாத முறையில் பயன்படுத்தும் பொருள்கள் அவரிடம் இருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், ஈராண்டுகள் நன்னடத்தையுடன் இருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டு அந்த 27 வயது ஆடவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
பாலியல் குற்றம் செய்வோரின் பட்டியலில் அந்த ஆடவரின் பெயரைப் பதிவு செய்யுமாறு நீதிபதி ஆணையிட்டதாக ஆஸ்திரேலிய எல்லைக் காவல் படை மற்றும் ஆஸ்திரேலிய மத்திய போலிஸ் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.
அந்த ஆடவர் சீனாவிலிருந்து பொம்மை ஒன்றை இறக்குமதி செய்ததையடுத்து, பெர்த்தில் பொருள்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு, விநியோகிக்கப்படும் நிலையத்தில் எல்லைப் படை அதிகாரிகள் நடத்திய சோதனையின்பேரில் கடந்த 2019ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்திய நாளில், அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவரது வீட்டைச் சோதனையிட்ட அதிகாரிகள் கைபேசி, கணினி கோபுரம், மடிக்கணினி, தகவல் சேமிப்புப் பெட்டகம் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அவற்றில் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வது தொடர்பான தகவல்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.
குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அந்த 27 வயது ஆடவரின் மாணவர் அனுமதி விசா தற்போது பரிசீலணையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் அந்தத் தடை செய்யப்பட்ட பொருளை இறக்குமதி செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் A$555,000 (S$580,000) அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைப் போன்ற பாலியல் தொடர்பான பொம்மைகளை வைத்திருப்பது, விற்பது, உருவாக்குவது போன்றவை குற்றமாகும். அத்தகைய குற்றமிழைப்போருக்கு குறைந்தபட்சம் ஈராண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படலாம்.