வளர்ந்துவரும் நாடுகள் உள்பட உலகநாடுகள் அனைத்துக்கும் கொவிட்-19 கொள்ளைநோயைத் தடுக்கக்கூடிய தடுப்பூசி மருந்து கிடைக்க உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக நேரலை மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ சியன் லூங், உலகப் பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக, தடுப்பூசி போட்டுக் கொண்டது தொடர்பாக சான்றளிக்கும் முறை குறித்தும் சிங்கப்பூர், இதில் அக்கறை கொண்டுள்ள நாடுகளுடன், பேசி வருவதாகக் கூறினார்.
இன்று நடைபெற்ற மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ், பருவநிலை மாற்றம் தொடர்பில் அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஜான் கெரி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் திருவாட்டி உர்சுலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
“நெருக்கடி நிலை ஏற்படும்போது, நமது பார்வை உள்நோக்கி இருப்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால், கொள்ளைநோய் ஒரு நாட்டின் எல்லையுடன் நின்றுவிடுவதில்லை. இதில், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருந்தாலன்றி எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
“நாம் அனைவரும் தேவையான தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்வது ஒருபுறம் இருக்க, வளர்ந்து வரும் நாடுகள் உள்பட அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி மருந்து கிடைக்க, அனைத்துலக ரீதியில் நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,” என்று பிரதமர் விளக்கினார்.