அண்மையில் துவாஸ் ஆலையில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவால் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நிகழ்ந்த வெடிப்பில் மூன்று ஊழியர்கள் மாண்டனர். மேலும் ஐந்து பேரின் நிலை கவலைக்கடமாக இருப்பதாக மனிதவள அமைச்சு இன்று (பிப்ரவரி 27) கூறியது.
இதே போன்ற வெடிப்பு, தீச்சம்பவங்கள் இனி ஏற்படாமல் இருக்க கொள்கை, விதிமுறை அல்லது வேலையிடப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை விசாரணைக் குழு முன்வைக்கும்.
விசாரணைக் குழுவுக்கு மாவட்ட நீதிபதி தலைமைதாங்குவார். அவருக்கு உதவியாக இரண்டு தொழில்நுட்ப மதிப்பீட்டாளர்கள் இருப்பர்.
விசாரணைக் குழு தொடர்பான மேல் விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும்.
இதற்கிடையே, துவாஸ் ஆலை வெடிப்பு குறித்து என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கவலை தெரிவித்தனர்.
“துவாஸ் அவென்யூ 11ல் நிகழ்ந்த தீச்சம்பவம் எனக்கு மனவேதனையை அளிக்கிறது. தீச்சம்பவம் காரணமாக மூவர் இறந்துவிட்டனர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தைப் பற்றி முதலில் தகவல் அறிந்தபோது வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம், BATU கட்டட கட்டுமானம் மற்றும் மரவேலை தொழிற்துறை ஊழியர்களுக்கான சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த சக ஊழியர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் உதவி செய்ய உடனடியாக முன்வந்தோம்.
“இந்தச் சிரமமிக்க காலகட்டத்தில் மாண்டோரின் குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்க உறுதி பூண்டுள்ளோம்,” என்று திரு இங் தெரிவித்தார்.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து ஊழியர்களையும் வெளிநாட்டு ஊழியர்கள் நிலைய அதிகாரிகள் நேற்று சென்று பார்த்ததாக அவர் தெரிவித்தார்.
துவாஸ் ஆலை வெடிப்பில் மாண்ட மூவருடன் சேர்த்து இம்மாதம் வேலையிடங்களில் மொத்த பத்து பேர் உயிரிழந்துவிட்டனர்.