கொவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்று மூத்த சிங்கப்பூரர்கள் கருதுகின்றனர்.
“தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படும் என கூறப்படும் புரளி எனது காதுக்கு விழுந்தது.
“இருந்தும் நான் அதைப்பொருட்படுத்தாமல் முழுநம்பிக்கையுடன் பிப்ரவரி 3ஆம் தேதி தெக் கீ சமூக நிலையத்தில் தனது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டேன்,” என்றார் மூத்த சிங்கப்பூரரான ஓய்வுபெற்ற திரு பாலன் கிருஷ்ணன்.
ஓராண்டு கடினமான காலகட்டத்தைக் கடந்து கடைசியில் தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்த கட்ட நகர்வாகக் கருதுவதாக திரு பாலன்கிருஷ்ணன் கூறினார்.
“தடுப்பூசி நிலையத்திற்குள் நுழைந்த ஐந்து நிமிடங்களுக்குள் எனக்குத் தடுப்பூசி போடப்பட்டது. ஊசி போட்டதற்குப் பின் பக்கவிளைவுகள் ஏற்படாததை உறுதி செய்யும் வகையில் அங்கிருந்த ஓய்வறையில் அரை மணி நேரம் ஓய்வெடுத்தேன்,” என்று தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனுபவத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் பகிர்ந்துகொண்டார் திரு பாலன்.
பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொண்ட 250,000 பேரில் திரு பாலனும் ஒருவர். அவர்களில் 110,000 பேர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர்.
அங் மோ கியோ, தஞ்சோங் பகார் ஆகிய பகுதிகளில் முன்னோட்ட தடுப்பூசி போடும் பணி வெற்றியடைந்ததையடுத்து, சிங்கப்பூர் முழுதும் 70 வயதுடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பிப்ரவரி 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
முன்னோட்டமாக பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த தடுப்பூசி போடும் திட்டத்தில் கிட்டத்தட்ட 5,000 மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அங் மோ கியோ பகுதியில் வசித்துவரும் ஆங் பெங் கியாப், 73, தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனுபவத்தைக் கூறும்போது, “ஊசி போட்டுக்கொண்டதற்குப் பின் இலேசான காய்ச்சல் ஏற்படலாம் என்று கேள்விப்பட்டேன். அதைத் தவிர்ப்பதற்காக நான் நிறைய தண்ணீர் குடித்துவிட்டு வீட்டில் தங்கி ஓய்வெடுத்தேன்.
“நான் கேள்விப்பட்டதுபோல் காய்ச்சல் ஏதும் எனக்கு வரவில்லை. எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக யாரும் அச்சப்படத் தேவையில்லை. தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழி,” என்று கூறியுள்ளார்.
இவர் தனது முதல் தடுப்பூசியை ஜனவரி 27ஆம் தேதியிலும் இரண்டாவது தடுப்பூசியை பிப்ரவரி 17ஆம் தேதியிலும் போட்டுக்கொண்டார்.