எதிரி கும்பலை பயமுறுத்துவதற்காக மலேசியாவிலிருந்து துப்பாக்கி கடத்திய ஆடவருக்கு சிறை, பிரம்படிகள்

எதிரி கும்பலை பயமுறுத்துவதற்காக மலேசியாவிலிருந்து துப்பாக்கி கடத்திய ஆடவருக்கு சிறை, பிரம்படிகள்

1 mins read
d0abd788-9376-4891-ad1d-7d14d05c4381
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

குண்டர் கும்பல் ஒன்றில் இருந்த முகம்மது இக்ரம் அப்துல் அஸிஸ் , மலேசியாவில் சுமார் $1,400க்கு துப்பாக்கி ஒன்றை வாங்கினார்.

அதை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்து எதிரி கும்பலை பயமுறுத்த திட்டமிட்டிருந்தார்.

துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்தை 26 வயது இக்ரம் இன்று (மார்ச் 1) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அந்த 26 வயது சிங்கப்பூரருக்கு 7 ஆண்டுகள் மற்றும் 10 மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் இன்று விதிக்கப்பட்டன.

உணவுக்கடை வைத்திருக்கும் இக்ரம், தன் ஜூரோங் வெஸ்ட் வீட்டில் துப்பாக்கியுடன் 8 தோட்டாக்களையும் வைத்திருந்தார்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் வேறு விவகாரமாக இக்ரமின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் துப்பாக்கி அவர்களிடம் சிக்கியது.

இக்ரமின் நண்பன் 26 வயது அமிருல் அஸ்ரஃப் முகம்மது ஜுனுஸ் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இரண்டு நண்பர்களும் ஒரே குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

வேறு கும்பலைச் சேர்ந்த 'ஃபாரிஸ்' என்பவர் அமிருலின் மனைவியைத் தாக்கியது தொடர்பில் அமிருல் தம் நண்பர் இக்ரமிடம் கூற, பயம் காட்டுவதற்காக இக்ரம் துப்பாக்கி ஒன்றை வாங்கினார்.

பெற்றோருடன் ஜோகூர் பாருவிலிருந்து திரும்பிய சமயத்தில் இக்ரம் துப்பாக்கியைத் தன் உடைமைகளுக்கிடையே மறைத்து வைத்ததாகக் கூறப்பட்டது.

போதைப்பொருள் தொடர்பில் இக்ரமின் வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டதில் துப்பாக்கி விவகாரம் அம்பலமானது.

குறிப்புச் சொற்கள்