சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் சிறுநீரகம் செயல்படாமல் போய்விடும் நோயாளிகளின் எண் ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. நீரிழிவுநோய் கூடி வருவதும் வயது மூப்பும் இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
கடந்த 2017ல் 1,999 பேருக்கு முற்றிவிட்ட கடைசிக்கட்ட சிறுநீரகக் கோளாறு இருந்தது.
இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில், மக்கள் தொகையில் மில்லியன் பேரில் 504.1 பேருக்கு இந்த நோய் இருப்பதாக தெரிகிறது. இந்த எண்ணிக்கை, 2009ல் 1,275 பேராகவும் மில்லியன் பேருக்கு 341.5 பேர் என்ற அளவிலும் இருந்தது.
சிங்கப்பூரில் ஏறத்தாழ 5,000 நோயாளிகளுக்கு ரத்த சுத்தகரிப்பு சிகிச்சை அளிக்கும் ஆகப்பெரிய நிறுவனமாகச் செயல்பட்டு வருகின்ற தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் ஓய், “சிங்கப்பூரில் சிறுநீரகம் செயல் இழக்கும் நோயாளிகள் எண்ணிக்கை குறை வதாகத் தெரியவில்லை. அது அதிகமாவது மிகவும் கவலையாக இருக்கிறது,” என்றார்.
சிங்கப்பூர் சிறுநீரக பதிவகத்தின் ஆகப்புதிய ஆண்டு அறிக்கை சென்ற மாதம் வெளியிடப்பட்டது.
அது 2018ஆம் ஆண்டுக்கு உரியது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்களில் பெரும்பாலானாவை 2017ஆம் ஆண்டில் இடம்பெற்றவை. இந்தப் பதிவக விவரங்களை உடனுக்குடன் புதுப்பித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்சினை பற்றி மேலும் பலவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்று திரு டிம் யோசனை கூறினார்.
சிறுசீரகம் செயல் இழப்பு மலாய்க்காரர்களிடையே அதிகமாக இருக்கிறது. அவர்களில் இத்தகைய நோயாளிகள் எண்ணிக்கை மில்லியன் பேரில் 676.9 பேராக இருந்தது. இந்தியர்கள் (309.5), சீனர்கள் (233) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
புதிய ரத்த சுத்திகரிப்பு நோயாளிகளில் ஐவரில் நால்வருக்கு வயது 50 முதல் 79 வரை இருந்தது.
இருந்தாலும் 2009ல் 61.1 ஆக இருந்த ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையைத் தொடங்கும் நோயாளியின் சராசரி வயது 64.3 ஆகக் கூடி இருக்கிறது.
ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2014ல் 764 ஆக இருந்தது. அது 2018ல் 914 ஆகக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.