மாது ஒருவரை இன ரீதியாக புண்படுத்தி அவரது மார்பில் உதைத்ததாக கூறப்படும் 30 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் இன்று (மே 11) கைது செய்தது.
பொது இடத்தில் மற்றவருக்குத் தொந்தரவு விளைவித்தது, மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது, வேண்டுமென்றே காயம் விளைவித்தது ஆகியவற்றின் பேரில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சுவா சூ காங் டிரைவ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 7) நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாது போலிசிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
தனியார் துணைப்பாட ஆசிரியரான இந்தோசா நிட்டா விஷ்ணுபாய் எனும் அந்த 55 வயது மாது, ஜூரோங் போலிஸ் பிரிவு தலைமையகத்திற்கு தாம் சென்று போலிஸ் அதிகாரியிடம் நடந்ததைக் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் இன்று அவர் கூறினார்.
அதன் பின்னர், சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் இடத்திற்கு போலிஸ் அதிகாரியுடன் திருவாட்டி நிட்டா சென்றார்.
“சந்தேக ஆடவர் அடையாளம் காணப்பட்டிருப்பதால் இப்போது நான் பாதுகாப்பாக உணர்கிறேன். இந்தச் சம்பவத்தை போலிஸ் திறம்பட கையாண்டுள்ளது,” என்றார் அவர்.
திருவாட்டி நிட்டா கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் சுவா சூ காங் எம்ஆர்டி நிலையத்திலிருந்து விளையாட்டரங்கத்தை நோக்கி வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.