சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இருவழிப் பயணங்களை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று இருநாட்டுப் பிரதமர்களும் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் லீ சியன் லூங், ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனை இன்று (ஜூன் 10) அதிபர் மாளிகையில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சு நடத்தினார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் தொடங்கிய பின்னர் வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் சிங்கப்பூருக்கு வருகையளித்திருப்பது இதுவே முதல் முறை. கடந்த மாதம் நியூசிலாந்துக்குச் சென்ற திரு மோரிசன், அடுத்த கட்டமாக சிங்கப்பூர் வந்துள்ளார்.
இரு தலைவர்களது சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கொவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிரான போராட்டம், இரு நாடுகளுக்கும் இடையே பயணங்களைத் தொடங்குவது போன்றவை குறித்து பேசியதாக திரு லீ தெரிவித்தார்.