மலேசியாவில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சிங்கப்பூரில் காய்கறிகளின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள சில ஈரச் சந்தைகளில் காய்கறிகளின் விலை சற்று கூடியுள்ளது.
தக்காளி விலைதான் ஆக அதிகமாக இரண்டு மடங்கு கூடி, கிலோ கிராமுக்கு $3 விலை வரை விற்கப்படுகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு, இங்குள்ள சில ஈரச் சந்தைகளுக்குச் சென்று காய்கறி விலைகளைக் கேட்டறிந்ததில் இது தெரியவந்தது.
தேக்கா சந்தை, டெக் வாய் சந்தை, கிம் மோ ஈரச் சந்தை, தோ பாயோ வெஸ்ட் சந்தை உள்ளிட்ட ஒன்பது சந்தைகளுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றது.
முட்டைகோஸ், லெட்டியூஸ் கீரை ஆகியவற்றின் விலைகளும் கூடியுள்ளன. இவை பெரும்பாலும் மலேசிய பண்ணைகளிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்படுகின்றன.
காய்கறி விலை கூடியதற்கு, மலேசியாவில் பெய்யும் கனமழைதான் காரணம் என்று கடைக்காரர்கள் பலர் தெரிவித்தனர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள், பரிசோதனைகள், ஆகியவற்றுடன் ஜூன் முதல் தேதியிலிருந்து மலேசியாவில் நடப்பில் உள்ள பொது முடக்கத்தால் பண்ணைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்டவையும் காய்கறி விலை அதிகமானதற்கு மற்ற காரணங்களாகக் கூறப்படுகின்றன.
(இச்செய்தியின் விரிவாக்கம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில் இடம்பெறும்)